Thursday, 12 February 2015

தேங்காய் சிரட்டையில் 180 கலைப் பொருள்கள்!

தி.ராமகிருஷ்ணன்


சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, மக்கள் வீசியெறியும் ஒரு பொருள் தனக்கு பணத்தை மட்டுமல்ல, உலகளாவிய பெருமையையும் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறுகிறார் ஜெயகுரூஸ்.
 சாதாரண தேங்காய் சிரட்டைகள் இவரது கை வண்ணத்தில் பெண்கள் விரும்பும் அணிகலன்களாகவும், சமையல் பொருள்களாகவும், நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும், பேனா மற்றும் கைக்கடிகாரங்களாகவும் உருப்பெற்றுள்ளன.
 இது எவ்வாறு சாத்தியமானது? ஜெயகுரூஸிடம் கேட்டபோது அவர் கூறியது: ""எனது தாத்தா சமாதானம் வில்லவராயர் தான் இதற்கெல்லாம் ஆணிவேர். கடல் ஆமையின் ஓடுகள் மூலம் கலைப்பொருள்களைத் தயாரித்து எங்களை அதிசயிக்க வைப்பார். அவரது பொருள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் திடீரென ஆமைகளைப் பிடிக்க அரசு தடை விதித்து விட்டது. இதன் காரணமாக தாத்தா தொழிலைக் கைவிட்டு விட்டார்.
 சிறுவயதிலேயே எனக்கு படிப்பு சரியாக வராததால், தாத்தா கைவிட்ட கலையினை வேறுவகையில் தொடர யோசித்தேன். இதன் விளைவு, தேங்காய் சிரட்டையில் பொருள்கள் தயாரிக்கும் வித்தியாசமான சிந்தனை. எனது எண்ணத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்திய போது ஊக்கமளித்த அவர்கள், பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அரசின் கைவினைப் பொருள்கள் வடிவமைப்பு பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எனது திறமையை நான் மேலும் வளர்த்துக் கொண்டேன்.
 பயிற்சிக்குப் பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து தேங்காய் சிரட்டைகளைப் பயன்படுத்தி கலைப்பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். மாவட்ட, வட்டார அளவில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் எனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஆரம்பித்தேன்.
 எனது தயாரிப்புகளைப் பார்த்து வியந்த இந்திய கலாச்சாரப் பண்பாட்டு மையமும், மத்திய கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையமும் தொடர்ந்து ஆதரவு அளித்ததால் தொழில் முன்னேற்றம் அடைந்தது.
 இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டேன். இதனால் எனது படைப்புகளுக்கு உலக நாடுகளிலும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்கா, ஜெர்மன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி, இந்திய மாநிலங்கள் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினரும் எனது தயாரிப்புகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
 தேவை அதிகரித்ததால், ஒரு சில கலைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். எனவே திறமையான கலைஞர்களை உருவாக்கி, இத்தொழிலை மேலும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க 80 பேருக்கு பயிற்சி அளித்தேன். தரம் வாய்ந்த, உறுதியான சிரட்டைகள் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாராளமாகக் கிடைத்து விடுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு வந்ததே இல்லை.
 தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருதினை எனக்கு வழங்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் ஆசிய அளவில் நடைபெற்ற கண்காட்சியில் கலாஸ்ரீ விருதும் எனக்குக் கிடைத்துள்ளது'' என்றார் அவர்.

1 comment: