Wednesday, 18 February 2015

குமரியில் மூலிகைப் பண்ணை அமையுமா?-

தி. ராமகிருஷ்ணன்


By கன்னியாகுமரி

First Published : 17 February 2015 12:23 AM IST

ஆயிரக்கணக்கான பாரம்பரிய சித்த வைத்தியர்களையும், நூற்றுக்கணக்கான மூலிகைகளையும் கொண்ட குமரி மாவட்டத்தில் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சித்த மருத்துவர்களிடையே வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தின் ஐந்து திணைகளில் நான்கு திணைகளை (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) உள்ளடக்கிய பகுதியாக குமரி மாவட்டம் விளங்குகிறது. இயற்கையாகவே அனைத்துத் தரப்பு மூலிகைகளும் இங்கு உள்ளதால் அதிகமான மக்கள் எந்த ஒரு வியாதிக்கும் மூலிகை மருந்துகள் மூலமாகவே தீர்வு காண்கிறார்கள். மேலும் இம்மாவட்ட மக்கள் ஆன்மிக வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து வாழ்வதால் சித்த வைத்திய முறையை முழுமையாக நம்புகின்றனர்.

இம் மாவட்டத்தின் வனப்பகுதிகளான கீரிப்பாறை, பேச்சிப்பாறை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் அரியவகை மூலிகைகளான கச்சோலா,சர்ப்பகந்தா, குருந்தொட்டி வேர் உள்ளிட்டவை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப் பகுதியில் உள்ள மூலிகைகள் தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை மழை நீரின்றி பட்டுப் போனாலும் மீண்டும் மழை பெய்யும்போது துளிர்த்து விடும் தன்மை வாய்ந்தது என்கின்றனர் பாரம்பரிய சித்த மருத்துவர்கள்.

இது குறித்து பாரம்பரிய சித்த மருத்துவரான வே.கணபதி(படம்) கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் 2000-த்துக்கும் அதிகமான மூலிகை மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் சாதரண தலைவலி தொடங்கி உடலில் ஏற்படும் வெட்டுக்காயம் வரை சிறந்த மூலிகை மருந்துகளைத் தயாரித்து சிகிச்சையளிக்கின்றனர். பாரம்பரிய மூலிகை மருந்துகளைச் சாப்பிடும் மனநிலை உள்ள மக்கள் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் வீடுகள் தோறும் மூலிகைத் தோட்டங்கள் அமைத்துள்ளனர். வீடுகள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் வளர்க்கும் வகையிலான 14 மூலிகைகள் அடங்கிய செடிகளை நாங்களே தயாரித்து வழங்குகிறோம். இதுவரையிலும் இம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மூலிகைத் தோட்டங்களை அமைத்துள்ளோம். குமரி மாவட்டத்தின் மூலிகைகளின் கூடாரமாக விளங்கும் மருந்துவாழ் மலையில் தற்போது 360 வகையான மூலிகைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 350 அடி உயரமும், இரண்டரை சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட இம்மலையின் மேல்பகுதியில் 6-க்கும் அதிகமான நீர்ச்சுனைகள் உள்ளன. இதனால் மூலிகைகள் இன்றளவும் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் மூலிகை மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துச் சென்று மருந்துகளைத் தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது இம்மலை வனத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதால் வைத்தியர்கள் அங்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக இம் மலையில் கிடைக்கும் குக்ளூ என்ற மூலிகை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி மனிதர்களுக்கு இதயநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப்படுகிறது.
 மூலிகை மருத்துவத்தை குமரி மக்கள் பெரிதும் நம்புவதால் எளிதாகக் கிடைக்கும் மூலிகைச் செடிகளான வசம்பு, செம்பருத்தி, மணத்தக்காளி, துளசி, நிலவேம்பு, சோற்றுக் கற்றாழை, கீழாநெல்லி, நந்தியாவட்டை, ஆடாதொடா உள்ளிட்ட மூலிகைகளின் குணங்களை அறிந்து வீடுகளில் மூலிகைத் தோட்டங்களை அமைக்க முன்வர வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடமும், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பாரம்பரிய சித்த மருத்துவத்தைக் காக்கும் விதமாக தமிழக அரசு அனைத்து விதமான மூலிகைகளையும் உள்ளடக்கிய பண்ணை அமைத்து மூலிகை மருத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தின் செயலரான என்.எம்.ஹரீஸ் கூறியதாவது:
அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தில் 900 சித்த மருத்துவர்கள் குமரி மாவட்டத்தில் மட்டும் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே பாரம்பரிய சித்த மருத்துவர்கள். இதுதவிர 1500-க்கும் அதிகமான சித்த மருத்துவர்கள் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளனர். இம் மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து வகையான மூலிகைளும் எளிதாகக் கிடைக்கின்றன.
 குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மூலிகைத் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலையும், நீர் சார்ந்த பகுதிகளும் அதிகமாக உள்ளதால் தமிழக அரசு மூலிகைப் பண்ணை அமைக்க 20 ஏக்கர் இடத்தை ஒதுக்கி தரவேண்டும். அவ்வாறு செய்தால் மூலிகை மருத்துவம் பாதுகாக்கப்படுவதோடு இளம் தலைமுறையும் இதை பின்பற்றும் வாய்ப்பு உருவாகும் என்றார் அவர்.


Thursday, 12 February 2015

தேங்காய் சிரட்டையில் 180 கலைப் பொருள்கள்!

தி.ராமகிருஷ்ணன்


சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, மக்கள் வீசியெறியும் ஒரு பொருள் தனக்கு பணத்தை மட்டுமல்ல, உலகளாவிய பெருமையையும் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறுகிறார் ஜெயகுரூஸ்.
 சாதாரண தேங்காய் சிரட்டைகள் இவரது கை வண்ணத்தில் பெண்கள் விரும்பும் அணிகலன்களாகவும், சமையல் பொருள்களாகவும், நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும், பேனா மற்றும் கைக்கடிகாரங்களாகவும் உருப்பெற்றுள்ளன.
 இது எவ்வாறு சாத்தியமானது? ஜெயகுரூஸிடம் கேட்டபோது அவர் கூறியது: ""எனது தாத்தா சமாதானம் வில்லவராயர் தான் இதற்கெல்லாம் ஆணிவேர். கடல் ஆமையின் ஓடுகள் மூலம் கலைப்பொருள்களைத் தயாரித்து எங்களை அதிசயிக்க வைப்பார். அவரது பொருள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் திடீரென ஆமைகளைப் பிடிக்க அரசு தடை விதித்து விட்டது. இதன் காரணமாக தாத்தா தொழிலைக் கைவிட்டு விட்டார்.
 சிறுவயதிலேயே எனக்கு படிப்பு சரியாக வராததால், தாத்தா கைவிட்ட கலையினை வேறுவகையில் தொடர யோசித்தேன். இதன் விளைவு, தேங்காய் சிரட்டையில் பொருள்கள் தயாரிக்கும் வித்தியாசமான சிந்தனை. எனது எண்ணத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்திய போது ஊக்கமளித்த அவர்கள், பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அரசின் கைவினைப் பொருள்கள் வடிவமைப்பு பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எனது திறமையை நான் மேலும் வளர்த்துக் கொண்டேன்.
 பயிற்சிக்குப் பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து தேங்காய் சிரட்டைகளைப் பயன்படுத்தி கலைப்பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். மாவட்ட, வட்டார அளவில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் எனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஆரம்பித்தேன்.
 எனது தயாரிப்புகளைப் பார்த்து வியந்த இந்திய கலாச்சாரப் பண்பாட்டு மையமும், மத்திய கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையமும் தொடர்ந்து ஆதரவு அளித்ததால் தொழில் முன்னேற்றம் அடைந்தது.
 இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டேன். இதனால் எனது படைப்புகளுக்கு உலக நாடுகளிலும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்கா, ஜெர்மன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி, இந்திய மாநிலங்கள் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினரும் எனது தயாரிப்புகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
 தேவை அதிகரித்ததால், ஒரு சில கலைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். எனவே திறமையான கலைஞர்களை உருவாக்கி, இத்தொழிலை மேலும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க 80 பேருக்கு பயிற்சி அளித்தேன். தரம் வாய்ந்த, உறுதியான சிரட்டைகள் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாராளமாகக் கிடைத்து விடுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு வந்ததே இல்லை.
 தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருதினை எனக்கு வழங்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் ஆசிய அளவில் நடைபெற்ற கண்காட்சியில் கலாஸ்ரீ விருதும் எனக்குக் கிடைத்துள்ளது'' என்றார் அவர்.

அசுர பலத்துடன் ஆம் ஆத்மி.

அசுர பலத்துடன் ஆம் ஆத்மி.


 இந்திய பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சக்தி மிக்க அரசியல் தலைவராக தில்லி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்துகிறது. பாஜகவின் பிரசாரத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தேர்தல் களத்தில் தனது நிலைப்பாட்டை மக்களிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் கெஜ்ரிவால். கடந்த தேர்தலின் போது தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு அவர் வைத்த கோரிக்கைகளை மக்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளை பாஜகவினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு நல்ல பாடத்தைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சேவை இனி நாட்டுக்கு தேவை இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவு மூலம் தலைநகரத்து மக்கள் மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து இந்த தேர்தல் முடிவு மக்களுக்கு கிடைத்த வெற்றி. பழி வாங்கும் அரசியல், எதேச்சதிகாரம், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று கூறியுள்ளார்
 நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்களர்கள் கொடுத்துள்ள மரண அடி என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வை.கோ. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் மனக் குமுறல்களை உணர்ந்திருந்தார். உணர்வுகளை மதித்தார். இந்த அளவுக்கு பெரிய வெற்றி தனக்கு அச்சத்தைக் கொடுக்கிறது என அவர் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 தில்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி, வகுப்புவாத, பிளவு சக்திகளுக்கு எதிராக பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட மக்கள் கொடுத்துள்ள தெளிவான தீர்ப்பு. ஒரு வகையில் இந்தியப் பெருமக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக தான் கருதுவதாக தெரிவிக்கிறார் இ.கம்யூ கட்சியின் மாநில செயலரான தா.பாண்டியன்.
 தலைவர்களின் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் இந்திய தேர்தல் வரலாற்றில் 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். ஊழல், கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும். தலைநகர் தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தப்போகும் ஆட்சியை நூறு கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.